எதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. சர்வதேச ஒத்துழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது, இதனால் சர்வதேச சட்டம், ஜனநாயக அமைப்புகளின் மீதான நம்பிக்கைகள், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
இரண்டாவதாக, உக்ரைன் மீதான ரஷ்யப் போர். இது பெரிய சேதத்தை மட்டுமல்ல, பெருமளவிற்கான மனித உரிமைகள் மீறலையும் ஏற்படுத்தியிருக்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே ஐ.நா. தலையிட்டது. துருக்கியின் உதவியுடன் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
உக்ரைன் நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கருங்கடல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன. எனினும் உலகம் முரண்பட்டுக் கிடப்பதால் இது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இதுவரை வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
மூன்றாவதாக, சமூக வலை தளங்களால் உலக அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் சமூக வலை தளங்கள் செயல்படுகின்றன. வெறுப்பு, கோபம் ஆகியவற்றை ஏற்படுத்தும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. சமூகத்தில் அவை தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தனிநபர் குறித்த குறிப்பாக பெண்கள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சமூகத்தில் அமைதியின்மையை மட்டும் இது ஏற்படுத்துவதில்லை.
உலகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு மாறாக, தேவையில்லாத கவனச் சிதறல்களில் திசைமாறி அழிவை நோக்கிப் போகிறது. சரியான,நேர்மையான, ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற மாதிரியான கருத்துகளை வெளியிடுவதற்கு சமூக வலைதளங்கள் பெரும் தடையாக இருக்கின்றன.
நான்காவதாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உலகை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது. பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடுவது ஜி-20 நாடுகள்தாம்.
ஆனால் அவை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது வளரும் நாடுகள்தாம். பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.
உலக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் தற்போது உள்ள நாடுகளுக்கிடையிலான எதிர்ப்பு, போட்டி ஆகிய சூழ்நிலைகளில் இது சாத்தியமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக