திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் 4 பேர் பாதிப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் 4 பேர் பாதிப்பு

தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது. கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 


மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகின்றது.


இந்நிலையில்  திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற வியாதிகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மழை பொழிவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீர் போன்ற பகுதிகளில் மழை நீர் அப்படியே தேங்கி இருந்ததால் ஏடி.எஸ் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். தற்போது ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் என 4 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 


அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு உள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு 32 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பாளர்கள் பணிகள் காலியாக உள்ளது. இதனால் பேரிடர் காலங்களில் சுகாதாரத்தை பேணும் வகையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடத்தை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள். 


மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிக அளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.


- செய்தியாளர் கலையரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/