சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 அக்டோபர், 2022

சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை.

சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை:


தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்கள் சிலரை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அரசு பதிவு பெறாத மற்றும் சட்டவிரோதமான முகவர்கள், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அவர்களை அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு இந்த இளைஞர்கள், ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை செய்ய வலியுறுத்தப்படுகின்றனர்.


அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற தகவல் வரப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகின்றது. அந்த வகையில், சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மூலமாக தாய்லாந்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 13 இளைஞர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.


இச்சூழ்நிலையில், தற்போது கம்போடியா நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று செய்தி வர பெற்றதை தொடர்ந்து, அங்கு உள்ள தமிழ் இளைஞர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தமிழக அரசு தொடர்பில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மியான்மர்போல கம்போடியாவிலும் சிக்கி தவிக்கும் தமிழர்கள், மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த கம்போடியா நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரவேண்டிய  நபர்கள் குறித்த தொலைபேசி எண்கள் அல்லது அவர்கள் அங்கு பணிபுரியும்  நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை +91-9600023645, +91-8760248625, 044-28515288 என்ற எண்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


இந்நிலையில் இதுபோன்று சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு  அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad