தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் முறையாக நிற்காமல் செல்வதை கண்டித்தும், அப்படி நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார் தெரிவித்து கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு அருகே உள்ள நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள தலையால் நடந்தான் குளம், வேப்பங்குளம், சன்னது புதுக்குடி, மேட்டு பிராஞ்சேரி உட்பட ஆறு கிராம மக்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருநெல்வேலி, கோவில்பட்டிக்கு தினமும் தங்கள் மேல் படிப்புகளுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்திற்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அரசு போக்குவரத்து நிர்வாகம் அனுமதி வழங்கியும் அதற்கான கட்டணம் தனியாக நிர்ணயம் செய்யபடவில்லை. அதை விடுத்து அரசு பேருந்துகளில் திருநெல்வேலியில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜாபுதுக்குடிக்கு வரும் SFS ரக பேருந்துகளில் பயணிகளிடம் ரூ 26 ம் அதாவது கயத்தாறு பேருந்து நிலையம் வரையிலான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதே போன்று கோவில்பட்டியிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜாபுதுக்குடி வரும் பயணிகளுக்கு திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் நிறுத்தத்திற்கான ரூ 35 பயண கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் நடத்துனர்களிடம் விபரம் கேட்டால், போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் தங்களுக்கு இது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என கூறிவிட்டு, கூடுதல் கட்டணத்தையே கறாராக வசூலித்து வருகின்றனர். மேலும் சில ஓட்டுனர்கள் மேற்படி நிறுத்தத்தில் அரசு அனுமதி இருந்தும், பேருந்துகளை நிறுத்துவதில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினையால் தினமும் இப்பகுதி மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி கிராம மக்கள் நேற்று 09.08.2023 புதன் கிழமை மாலை 5 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ, மாணவிகள் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் (வணிகம்) கிராம மக்களிடம் அலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக ராஜாபுதுக்குடிக்கு உரிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர், ஆனால் கிளை மேலாளர் இது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என அலட்சியத்துடன் கூறினார். முரண்பட்ட தகவலால் குழம்பி போய் இருக்கும் அப்பகுதியினர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் புகார் அனுப்பி உள்ளனர்.
இருப்பினும் பேருந்து நிறுத்தத்தில் முறையாக அரசு பேருந்துகளை நின்று செல்லவும் முறையான கட்டணம் வசூல் செய்யவும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விரைவில் உத்தரவிடப்படும் என்றும் அதிகாரிகள் ஃபோனில் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சிறைபிடித்த அரசு பஸ் விடுவிக்கப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக