தூத்துக்குடி, மார்ச் 21, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 - தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன பேரணியை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16.03.2024 அன்று பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெறும் என்று அறிவித்ததைத்தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (21.03.2024) அரசு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது மார்க்கெட் சந்திப்பு, விவிடி சந்திப்பு, எம்.ஜி.ஆர். பூங்கா, 3ஆம் மைல் பாலம் வழியாக பாளையங்கோட்டை சாலையில் சென்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இப்பேரணியில் வாக்காளர் பதிவு அலுவலர்/தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், உறுப்பினர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆ.சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக