நாசரேத், ஏப்ரல் 10, நாசரேத், பிரகாசபுரம், மூக்குப்பீறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தினமும் பகல், இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தற்போது பகலில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருப்பதால் மின்சாரம் இல்லாத நேரத்தில் புழுக்கம் காரணமாக பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளரும், நாசரேத் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ் குமார் கூறுகையில், நாசரேத் பகுதியில் தினமும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதோடு சில நேரம் மின் அழுத்த குறைவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடை, வீடுகளில் உள்ள மின்விசிறி, டி.வி, கம்ப்யூட்டர், பம்புசெட் மோட்டார் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பழுதாகி விடுகின்றன.
சம்பந்தப்பட்ட மின் அதிகாரிகளிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் பகுதியில் விரைவில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையெனில் மின் தடை, மின் அழுத்த குறைவை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக