தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் மூலம் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் 5-ம் திருவிழாவான (4.5.25) விளாத்திகுளம் காவல் துறையினர் சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது. காவல் துறையினர் சார்பில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளாத்திகுளத்தில் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் நன்கு அலங்கரிக்கப்பட்டு வாயிலில் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு, ஒளிர் வண்ண விளக்குகளால் ஜொலிக்க விடப்பட்டு காவல் நிலையமே திருவிழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.
இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்திலிருந்து டிஎஸ்பி அசோகன் மற்றும் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற 5-ஆம் நாள் திருவிழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர் காவல்துறையினர் சுவாமி எழுந்தருளிய சப்பரத்தினை வடம் பிடித்து இழுத்து நகர்வலம் வந்தனர். காவலர்கள் தங்கள் குடும்பத்தாருடன் வந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர் இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் சார்பில் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விளாத்திகுளத்தில் காவல்துறையினரே பொதுமக்களுடன் இணைந்து விழா எடுத்து நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக