தூத்துக்குடி மாவட்டம், பிப் 22, தூத்துக்குடியில் வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி அதன் மூலம் ரூபாய் 11,72,000/- பணத்தை மோசடி செய்தும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டலும் விடுத்தவர் கைது - கைது செய்த சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வாவு யூவியாஸ் பாக்மி (47) என்பவரின் மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் கடந்த 19.10.2023 அன்று ஒரு செல்போன் எண்ணிலிருந்து Part time Job சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனையடுத்து மேற்படி வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்ம நபரிடம் வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய லிங்க் மூலம் Telegram Groupல் இணைந்தும்,
Task செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் Register-ம் செய்துள்ளார்.
பின்னர் மேற்படி அந்த மர்ம நபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி இலாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கிலிருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூபாய் 11,72,000/- பணத்தை செலுத்திய பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22.11.2023 அன்று மேற்படி மர்ம நபர் ஜின்னாவின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கடந்த 22.11.2023 அன்று கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 20,000/- பணமும், அதனைத் தொடர்ந்து 14.12.2023 அன்று ரூபாய் 30,000/- பணமும், 15.12.2023 அன்று ரூபாய் 9,000/- பணத்தையும் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து மேற்படி ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு Instagram Id-ல் பதிவு செய்து, பின்னர் கடந்த 20.12.2023 அன்று முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி மேற்படி எதிரி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி வாவு யூவியாஸ் பாக்மி அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியில் விசாரணை மேற்கொண்டு மேற்படி வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினரிடம் பண மோசடி மற்றும் சமூக ஊடகம் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஸ்ரீதர் (36) என்பவரை (20.02.2024 அன்று) மதுரை முடக்கு சாலை, சோச்சடை மெயின்ரோடு பகுதியில் வைத்து கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.
மேலும் இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி வழக்கில் சம்பந்தபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக