வாணியம்பாடி,ஜன்.28- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பூகடை பஜார் பகுதியில் திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகர காவல் நிலையத்தை வணிகர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் பிரசாந்த் ஆகியோரை சாந்தாபுரா போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 13 தங்க செயின்களை வாணியம்பாடியில் உள்ள இரண்டு நகை கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கர்நாடகா போலீஸார் வாணியம்பாடியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபு என்பவரை கைது செய்து விசாரணைக்காக சாந்தாபுரா காவல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து நகை கடை உரிமையாளரை கைது செய்ததாக வாணியம்பாடி வணிகர் சங்க பேரமைப்பினர் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நகர காவல் நிலையத்தை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நகர காவல் நிலையத்திற்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இன்று காலை 10 மணிக்குள் கர்நாடகா போலீசாரிடம் பேசி நகைக்கடை உரிமையாளர் பாபு திருட்டு நகைகளை கொள்முதல் செய்யவில்லை என்றால் நிச்சயம் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் சுமார் 5 மணி நேரம் நகர காவல் நிலைய வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக