பொது இடங்களில் கொடி கம்பங்கள் அகற்ற கோர்ட் உத்தரவு-
கலப்பை மக்கள் இயக்கம் வரவேற்பு-அஞ்சுகிராமம் பிப்-2 கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும்,சினிமா டைரக்டரும்,சமூக ஆர்வலருமான பி.டி செல்வக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பொது இடங்களில் கட்சி, இயக்கம், மதம், சாதி சம்பந்தமான கொடி கம்பங்களை நட்டு வைப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. மேலும் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இவை காரணமாக உள்ளதால் பொது இடங்களில் நடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இக்கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும் அதன் பின்னும் அகற்றப்படாவிட்டால் அதிகாரிகளே அதனை அகற்றிட வேண்டும் எனவும் அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுநலன் கருதியும், பொதுமக்களின் நன்மை கருதியும் இத்தகைய உத்தரவினை கலப்பை மக்கள் இயக்கம் வரவேற்கிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இத்தகைய நடைமுறை அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இத்தகைய உத்தரவு நடைமுறைப்படுத்தும் போது இதுதொடர்பான பிரச்னைகள் நிகழ்வது முழுவதுமாக தடைபடும் நிலை ஏற்படும்.
இது ஒருபுறமிருக்க போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இன்னலை ஏற்படுத்திடும் வகையில் சாலை சந்திப்புக்கள் மற்றும் பிரதான பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள சிலைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்றாகும். நினைவிடங்கள் மற்றும் பூங்காங்களில் மட்டும் குறிப்பிட்ட தலைவர்களது சிலைகளை அமைத்து பராமரிக்கப்பபடவேண்டும். மாறாக பொது இடங்களில் உள்ள சிலைகள் பல்வேறு தொல்லைகளுக்கே இடமளிப்பதாக உள்ளது.
கொடிகம்பம் விஷயத்தில் நல்லதொரு உத்தரவினை பிறப்பித்தது போல் சிலைகள் விஷயத்திலும் பிறப்பித்தால் சமூகத்திற்கும், சட்ட ஒழுங்கிற்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரும் நன்மை ஏற்படுவதாக அமையும். எனவே இதனையும் கவனத்தில் கொண்டு நீதிமன்றம் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்திட வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி செல்வக்குமார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக