ஜன.24-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி என்ற இலக்கை குறிவைத்து 25 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களை தயார்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. அம்மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள்தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீஸன் முடிவடையும். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு சுமார் 19 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பத்தியானது.
தற்போது, உப்பளங்களில் குவிந்துள்ள மணல் குவியல்களை அகற்றுதல், கரைகளை சீரமைத்தல், ஆழ்துளைக் கிணறுகளை சரி செய்தல், பாத்திகளில் உப்புநீர் நிரப்புதல், உப்பளங்களில் தேங்கியிருந்த ஜிப்சத்தை அகற்றும் பணியை தொழிலாளர்கள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து இப்பணிகள் முடிவடைந்து உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு மார்ச் மாதமாகிவிடும். எனவே, நடப்பாண்டு மார்ச் முதல் வாரத்திலேயே உப்பு உற்பத்தி முழு அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி குறைந்த நிலையில், இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது வரும் மாதங்களில் நிலவும் வானிலையைப் பொறுத்தே அமையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக