தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-2027-ஆம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,25,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோமாரி நோயானது ஒரு வகை வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் காற்றின் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒன்று.
இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது, இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
எனவே இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்.
தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது நடைபெறவுள்ள ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில் தவறாது அனைத்து மாட்டினங்களுக்கும் விடுபாடின்றி தடுப்பூசி செலுத்தி பயன்பெறவும், தடுப்பூசி போடுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர்
விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக