உளுந்தூர்பேட்டை, ஆகஸ்ட் 19:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில் 70 வயது முதியவரை உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமி, மாலை நேரத்தில் தனது தோழிகளுடன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி பதுங்கியிருந்த நிலையில், அங்கு இருந்த 70 வயது முதியவர் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாயார், சிங்கப்பெண்கள் அதிரடிப்படை உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றச்சாட்டுக்குள்ளான 70 வயது முதியவர் சூரசங்கு என்பவரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்டவரை கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சம்பவம் தொடர்பான கூடுதல் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக