இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. சைதாப்பேட்டை குயவர் வீதி, சேசாசலம் வீதி சந்திப்பில் கட்சியின் ஆண்களும், பெண்களுமாக திரள ஆரம்பத்தினர். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க தோழர்கள் வருகையின் அடர்த்தியும், எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தன. சேசாசலம் வீதி நிரம்பி வழிந்து, ஜோன்ஸ் சாலை வழியாக அணிவகுக்க ஆரம்பித்தது.
குயவர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் முற்றுகைப் போராட்டத் தொடக்க நிகழ்ச்சி துவங்கியது. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி எச் வெங்கடாசலம், மாநிலத் துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன் எம் பி (திருப்பூர்) எம். செல்வராஜ் எம்பி, (நாகபட்டினம்) சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன் எம் எல் ஏ (தளி), க. மாரிமுத்து எம்எல் ஏ (திருத்துறைப்பூண்டி). ஆகியோர் கோரிக்கைகள விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியினை மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நா பெரியசாமி தொகுத்து வழங்கினார்.
நிறைவாக கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் விருதாளர் தோழர் இரா நல்ல கண்ணு, ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துகிறோம். இப்போரட்டத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்- என்று கூறி கட்சிக் கொடியை பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா கையில் கொடுத்து முற்றுகைப் போராட்ட பேரணியைத் தொடக்கி வைத்தார்.
சேசாசலம் வீதியில் புறப்பட்ட பேரணி, ஜோன்ஸ் சாலை வழியாக பனகல் மாளிகையை நெருங்கிய போது, காவல்துறை பேரணியை வழி மறித்து, அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தனர், ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோழர்களை கைது செய்த காவல்துறை, அருகில் இருந்த ஒய்எம்சிஏ உடற்பயிற்சி அரங்கில் கொண்டுபோய் காவல் வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கைது செய்யப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக