தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் சாதிய அடையாளங்களை அழித்த பொது மக்கள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் சாதிய அடையாளங்களை அழித்த பொது மக்கள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக அப்பகுதி பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமங்களில் பொது இடங்களில் இருந்த 37 ஜாதிய அடையாளங்களை அழித்துள்ளனர்.



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் பயனாக ஏற்கனவே நேற்று (16.08.2023) புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பேருந்து நிறுத்தம் போன்றவற்றில் இருந்த 101 சாதிய அடையாளங்களை கிராம மக்கள் தானாகவே முன் வந்து பெயிண்டால் அழித்தனர்.


அதனைத் தொடர்ந்து இன்று (17.08.2023) ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் பகுதிக்கு செல்லும் வாய்க்கான்கரை சாலையில் உள்ள பேட் துரைசாமிபுரம், நளன்குடி, இசக்கியம்மாள்புரம், ஸ்ரீபராங்குசநல்லூர் மற்றும் ஆழ்வார்தோப்பு உட்பட சில கிராமங்களில் இருந்த மின் கம்பங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ஊர் பெயர் பலகைகள் போன்றவற்றில் இருந்த 7 சாதிய அடையாளங்களை கிராம பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தாமாக முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் அழித்து அடையாளங்களை நீக்கி உள்ளனர்.


அதேபோன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பலப்பிறப்பு பகுதியில் 18 மின்கம்பங்கள் மற்றும் ஒரு பேரூந்து நிழற்கூடம் ஆகியவற்றில் இருந்த சாதிய அடையாளங்களையும், வீரமாணிக்கம் கிராம பகுதியில் 12 மின்கம்பங்களில் இருந்த சாதிய அடையாளங்களையும் அக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் வெள்ளை நிற பெயிண்டால் அழித்துள்ளனர். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி மாவட்ட கண்காணிப்பாளர் கேட்டு கொண்டுள்ளார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad