மானாமதுரை நகர் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்க பணியில் 'சென்ட்ரல் லைன் மார்க்கிங்' வரையப்படாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாசிலை முதல் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளான தேவர் சிலை, காந்தி சிலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உடைகுளம், தயாபுரம், வட்டாட்சியர் அலுவலகம், சிப்காட் ரயில்வே கேட் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தார் சாலை விரிவாக்க பணியானது நிறைவடைந்த நிலையில், 'சென்ட்ர் லைன் மார்க்கிங்' எனப்படும் சாலைகளின் நடுப்பகுதி மற்றும் இருபுறமும் எல்லைக் கோடுகள் வரையப்படாமல் இருந்து வருவதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ரோடு எது? வழி எது? என்று தெரியாமல் வாகனங்களை இயக்க திணறி வருகின்றனர். சாலையில் வேகத்தடை எங்கு உள்ளது என்பதற்கான முன்னெச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும், சாலையின் எல்லையை வரையறுக்கும் 'சோலார் ரிஃப்ளெக்டர்கள்' நிறுவப்படாததாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் எல்லை கோடு வரையறுக்கப்படாததால் எதிரெதிர் திசையிலிருந்து சென்று வரும் வாகனங்களின் விளக்குகள் பலனளிக்காமல் சாலை விபத்து ஏற்படும் மிகவும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. மேலும் ஏற்கனவே சுந்தரம் நடப்பு அருகில் தார் சாலை பணியின் தவறுகள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டி பெரும் விபத்துக்குள்ளானது இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே சாலை அமைத்த ஒப்பந்ததாரர் வெகு விரைவாக இறுதி கட்ட பணிகளை கையோடு சரிவர செய்து முடிக்குமாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக