திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி நேற்று (31.07.2025 – ஆடி 15) மதியம் தொடங்கியது. தீர்த்தகுளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு இருப்பதாக தனியார் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவின் பேரில், 2024 செப்டம்பர் 5ஆம் தேதி, தீர்த்தகுளத்தைச் சுற்றியுள்ள 64 குடியிருப்புகளை அகற்றுமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த நவம்பர் 23ஆம் தேதி, நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பாளர்களுக்கு, 3 நாட்களில் இடங்களை காலி செய்யுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் குடியிருப்பாளர்கள் “மாற்று இடம் வழங்கப்படும்வரை வீடுகளை காலி செய்யமாட்டோம்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, 2024 செப்டம்பர் 30ஆம் தேதி கலெக்டர், தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மதியம் 1.40 மணியளவில் தாசில்தார் யுவராஜ், நகராட்சி கமிஷனர் குமரன், நகரமைப்பு அலுவலர் திலகவதி, வி.ஏ.ஓ சிற்றரசு உள்ளிட்டோர், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் தொடங்கினர். இதை எதிர்த்து அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள், “முன் அறிவிப்பின்றி, மாற்று இடமின்றி எப்படி வீடுகளை அகற்றலாம்?” எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் தலையிட்டு பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
செய்தியாளர்: அருள்.சி, விழுப்புரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக