திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலராகிய மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிர்வாகி ஈ.பி.அ.சரவணன், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு அண்ணாதுரை, கூடுதல் செயலாளர் ரமேஷ்குமார், துணை தலைவர் கணபதி, துணை சுரேஷ், தாலுகா பொறுப்பாளர்கள் சரஸ்வதி, மூர்த்தி, சுப்பிரமணி, காளிமுத்து, சுப்பிரமணியம், சித்திரை செல்வி, காந்திமதி , பல்லடம் சரஸ்வதி, அன்னாள் ஆரோக்கிய மேரி, பாலாஜி, அர்ஜூனன் , சிவகாமி, முருகலட்சுமி, ஆறுமுகநயினார், சரோஜினி, திருமுருகன், இராமசாமி மற்றும் டிசம்பர் 3 இயக்கம், விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கூறியதாவது:-சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லை.
பொது நலத்தோடு இரவு பகலாக மக்கள் பணியாற்றுகின்ற சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தவறுகளை சுட்டி காட்டுவதால் சமூக ஆர்வலர்களை மிரட்டும் விதமாக சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை தேவை.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளி அருகே நில உரிமையாளர் தரப்பைச் சேர்ந்த சிலர் நிலத்தை அளவீடு செய்ய வந்தோருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இரு வழக்கறிஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டிக்கிறோம். சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தாராபுரத்தில் சமூக செயல்பாட்டாளர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் என்கின்ற மாற்றுத்திறனாளியை படுகொலை செய்யப்பட்டதற்கு இக்கூட்டம் வாயிலாக அஞ்சலி செலுத்துகிறோம்.
அவர் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக வாதாடிய ஒரு வழக்கறிஞர் ஆவார். மேலும் பல பொதுநல வழக்குகளையும் எடுத்து நடத்தி வெற்றி கண்டுள்ளார். அவர் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல பொது சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும்.எனவே அவரைக் கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கொலையுண்ட அந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு நீதி கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடும்,சமூக இயலாமையை எதிர் கொள்ளும் சமூகத்தின் மீது (SC,ST) வன்கொடுமை நடக்கும் போது எப்படி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறதோ அதுபோன்று உடல் இயலாமை (மாற்றுத்திறனாளிகள்) உள்ளவர்கள் மீது இது போன்ற வன்கொடுமை நிகழும் போது அவர்களைப் பாதுகாக்க அவர்களுக்கென ஒரு தனி சட்டம் (வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை போல்) கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக