திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயநாராயணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் நண்பருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றோம். முன்னதாக அங்குள்ள ஒரு விடுதியில் அறை முன்பதிவு செய்தோம்.
அங்கு தங்கியிருந்த போது தான் அது கோவில் நிதியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி என்பதும், அந்த விடுதி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஓட்டல் ஆலயம் என்ற பெயரில் நடத்தப்படுவதும் தெரியவந்தது.
கோவில் நிதியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக கட்டுப்பாட்டில் வழங்கி நடத்துவது சட்டவிரோதம். எனவே பக்தர்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஓட்டல் ஆலயம் என்ற பெயரில் நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும்,
திருச்செந்தூர், ராமேசுவரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் நிதியில் கட்டப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் வழங்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளை திரும்ப பெறவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் வழங்க இடைக்கால தடை விதித்தும், இந்த மனு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக