தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகே உள்ள குலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் லேட்.முருகன். இவரது மனைவி வைரம் (வயது 29). இவர் எட்டாவது வரை படித்துவிட்டு கொலையனூர் கிராமத்தில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது பழனியில் மொத்தமாக கஞ்சாவை வாங்கிக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் தாராபுரம் பகுதியில் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் தாராபுரம் பொள்ளாச்சி ரோடு தனியார் நூற்பாலை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, பொறுப்பு உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வைரத்தை கையும் களவுமாக பிடித்து போலீஸில் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 1.10 கிலோ கஞ்சாவையும் அவர் விற்பனைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டி வாகனம், மொபைல் போன் ஒன்றையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக