தூத்துக்குடி, வியாபாரியைத் தாக்கி செல்போன் பறிப்பு - 8 கி.மீ தூரம் விரட்டிச் சென்று கைது செய்த டி.எஸ். பி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி, வியாபாரியைத் தாக்கி செல்போன் பறிப்பு - 8 கி.மீ தூரம் விரட்டிச் சென்று கைது செய்த டி.எஸ். பி.

தூத்துக்குடியில் சிகரெட் வியாபாரியைத் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை, டி.எஸ்.பி மற்றும் போலீசார் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி எஸ்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (36). இவர் சிகரெட் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை சுமார் 4 மணி அளவில், மடத்தூர் ஆர்ச் அருகே உள்ள ஒரு கடையில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர்.

சில்லறையாகச் சிகரெட் வழங்க முடியாது என தினகரன் மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திடீரென தினகரனை கீழே தள்ளி, கத்தியால் அவரது நெற்றிப் பகுதியில் குத்திவிட்டு, அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார், காயமடைந்த தினகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. த.சுதிர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

அப்போது, தாக்குதல் நடத்திய நபர்கள் அதே வழியே இருசக்கர வாகனத்தில் செல்வதாகப் பொதுமக்கள் அடையாளம் காட்டினர். உடனடியாகச் செயல்பட்ட டி.எஸ்.பி. சுதிர் மற்றும் ஹைவே பேட்ரோல் (நெடுஞ்சாலை ரோந்து) போலீசார், தப்பியோடியவர்களை விரட்டினர்.

தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அந்த நபர்களை விரட்டிச் சென்ற போலீசார், சத்யா நகர் மேம்பாலம் அருகே அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கதிர்வேல் நகர் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்த முருகையா மகன் பிரேம்குமார் (36), பாத்திமா நகரைச் சேர்ந்த அலாய்சியஸ் மகன் பென்கர் (40) என்பது தெரியவந்தது. 

இதில், பிரேம்குமார் மீது குளத்தூர், ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பென்கர் மீதும் தென்பாகம், புதுக்கோட்டை காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களைப் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad