மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம், வலையபட்டி ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 11 பேர் கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். அந்த ஆட்டோ கே.வெள்ளாகுளம் பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனம் முந்திச்செல்ல முயன்றது.
இதில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இந்துஜா (10), பகதீஷ் ஸ்ரீ, சரண் (9), முத்தமிழ் அன்பு (10), பன்னீர்செல்வம் (12), கவிதா (12), ஆதிஸ்வரன் (12), கார்த்திகா (11), நாகலட்சுமி (12), சாதனா (11) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
அவர்களை உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவரான பொன்னையம்பட்டியை சேர்ந்த பெருமாள், இருசக்கர வாகனத்தில் வந்த பூபதி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்துஜா, கவிதாஸ்ரீ, மகாலட்சுமி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காயம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு திருமங்கலம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக