காட்டுமன்னார்கோவில் அருகே தொருக்குழி கிராமத்தில் ஆசிரியர் இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி மாணவர்களின் நலனில் கோட்டை விடும் அரசு அதிகாரிகள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொருக்குழி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது பள்ளிக்கு வயது 88 ஆண்டுகள் கடந்து வருகிறது இவ்வாறான நிலையில் இந்தப் பள்ளியில் ஆரம்பத்தில் 250 மாணவர்களுக்கு மேல் கல்வி பயின்ற நிலையில் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். இவ்வாறான சூழலில் தற்போது பள்ளியில் முப்பது மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும்தான் வகுப்பு எடுத்து வந்தார். அவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த போது பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் தாங்களாக வந்து வகுப்பறையில் அமர்ந்தனர். இரண்டாவது நாளாகவும் அதே நிலை நீடித்தது. இந்தப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமி காந்தன் மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக மாணவர்கள் பெற்றோர்கள் அழைத்ததன் பேரில் பள்ளிக்கு வந்த நிலையில் ஆசிரியர் இல்லாததை கண்டு அதிர்ந்தார். இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தார். அப்போது அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உத்தரவு நகல் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டது. அதில் தொருக்குழி பள்ளி உட்பட மாவட்டத்தில் 12 ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆனால் தொருக்குழி பள்ளிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர் இதுவரை பள்ளியில் பொறுப்பு ஏற்கவில்லை. இதனால் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்து வருவதாகவும் வேதனையோடு தெரிவித்த அவர், உடனடியாக இந்த அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தனக்கும் தற்போது இந்த பள்ளிக்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் இந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் என்ற மனவேதனையில் இதனை தெரிவிப்பதாக அவர் வேதனையோடு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக