ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூரில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூரில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.


திருக்கடையூர், ஜூலை 27 -

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்தலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு விசேஷ தேரோட்டம் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


இந்த புனித ஸ்தலம், சிவன் எமனை காலால் உதைத்த தலம் என்ற பரம்பரிய சிறப்பை பெற்றது. இங்கு உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ யாக, ஹோமங்கள் நடைபெறும். அமிர்தகடேஸ்வரரும், அபிராமி தேவியரும் அருள் பாலிக்கும் இந்த கோவிலுக்கு, தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களிலிருந்து வந்து தரிசனம் செய்கின்றனர்.


ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா, இவ்வாண்டு ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாட்களாக வீதியுலா, மண்டகாப்படி, இசை நிகழ்ச்சிகள், அலங்கார உற்சவங்கள் நடைபெற்றன. இதன் 9-ம் நாள் விழாவை முன்னிட்டு, சுவாமியும், அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


மேல வீதியில் இருந்து தேரோட்டம் ஆரம்பித்து வடக்கு, கீழக்கு, தெற்கு வீதிகள் வழியாக வீதியுலா பண்ணி, மீண்டும் மேல வீதியில் வந்து நிறைவடைந்தது. தேரை இழுப்பதற்காக பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்று வடம் பிடித்தனர். விழாவில் கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் ராம்குமார், குருக்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு காவல் துறை சீராகச் செய்திருந்தது. நிகழ்ச்சி முழுவதும் பக்தர்கள் ஒழுங்காகவும் பக்திபூர்வமாகவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad