விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் உரையாற்றினார். மாநில முதல்வர் அவர்களின் முன்முயற்சியாக பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வுகாணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் தொடக்க விழா நாளை 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற உள்ளது.
அதன் பிறகு மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 349 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 229 முகாம்கள், சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் மொத்தம் 120 முகாம்கள் நடைபெறும். ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள், நகர பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் வழங்கப்படும். முதல்நாளான 15ம் தேதி ஆமணக்குநத்தம், ஆலடிப்பட்டி, கீழ கெப்புலிங்கம்பட்டி, மறையூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளிலும், விஜயசுந்தர மஹால், பெருமாள்பட்டி நாடார் திருமண மண்டபம் ஆகிய நகர பகுதிகளிலும் முகாம்கள் துவங்க உள்ளன.
இம்முகாம்களுக்கு முன்னதாக தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று 36,663 துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, ஆனால் விண்ணப்பிக்க தவறிய மகளிர் இந்த முகாம்களில் நேரில் விண்ணப்பிக்கலாம் எனவும், 45 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக