கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பி2 பிளாக் மாற்று குடியிருப்பு ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பன் 63. இவர் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் தற்போது நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பத்மாவதி 55 இருவரும் வேறொருவருடன் திருமணம் ஆகி பிரிந்தவர்கள். கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஓரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறான். கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்துள்ளது.
குறிப்பாக பத்மாவதி கொளஞ்சியப்பன் மீது சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தின் முன்பு கூட பத்மாவதி கொளஞ்சியப்பன் வேறுவருடன் தொடர்பு உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவரும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கொளஞ்சியப்பன் நள்ளிரவில் தனது வீட்டில் படுத்து கொண்டிருந்த போது பத்மாவதி தனது கணவனை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.
மேலும் கணவர் உடலுடன் விடியற்காலை வரை பத்மாவதி அங்கே இருந்துள்ளார். பின்னர் காலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனது கணவனை கொன்று விட்டதாக கூறியதை அடுத்து அங்கு வந்து பார்த்தபோது கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்து போன கொளஞ்சியப்பன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி பத்மாவதியை நெய்வேலி நகர காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் மனைவி கணவனை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக